புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் வெறுத்துப் போய் 'நான் சிகிச்சை செய்துகொள்ள மாட்டேன்' என்று அடம் பிடித்தார். சென்ற ஆண்டு வந்த பச்சைப்புடவைக்காரி நூலைப் படித்துவிட்டு 'பிழைத்தாலும் இறந்தாலும் நான் இருக்கப்போவது அவள் காலடியில்தான் என்னும்போது எனக்கெதற்கு பயமும் வெறுப்பும்?' என்று உணர்ந்து மனம் திருந்தினார். மற்றவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்த நான் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டு ரத்தம் சிந்தியபோது என் குருவாக வந்து ஞானத்தைக் கொடுத்து அருள்பாலித்தாள் அந்த அன்பரசி. குடிகாரத் தந்தையிடம் அன்பு காட்டிய ஒரு பெண்ணின் கதையை நான் எழுதப்போக அதுவே ஒரு சிறந்த கூட்டுப் பிரார்த்தனையாக அமைந்துவிட்டது. “இதெல்லாம் நம்பற மாதிரியாவா இருக்கு?” என்று கேட்பவர்கள் தயவு செய்து இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள். 'நானே அன்பு, அன்பே நான்' என்று எனக்குப் பச்சைப்புடவைக்காரி உபதேசம் செய்ததை உண்மை என்று நீங்கள் நம்பினால் இது புத்தகம் இல்லை, பொக்கிஷம்.